அமைச்சு பதவிகள் கிடைக்காமையால் அதிருப்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் இதுவரை கிடைக்காதது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 பேரின் பெயர்கள் பல வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும் இதுவரை அமைச்சு பதவிகள் கிடைக்காது சம்பந்தமாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறபடுகிறது. 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் 18 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 12 பேரையே நியமிக்க வேண்டியுள்ளது. பொதுஜன பெரமுன 12 பேரின் பெயர்களை அனுப்பி இருந்தாலும் ஏனைய கட்சிகளுக்கும் சில அமைச்சு பொறுப்புகளை வழங்க வேண்டியுள்ளதால்,பொதுஜன பெரமுனவுக்கான அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைப்பட வாய்ப்புள்ளது.
ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஏ.எல்.எம் அதாவுல்லா, ஜீவன் தொண்டமான், வஜிர அபேவர்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



