சர்வதேச நாடுகளை பொருத்தவரையில், இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தமிழர்களின் விடயங்களை பயன்படுத்த்துகிறது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேச நாடுகளை பொருத்தவரையில், இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தமிழர்களின் விடயங்களை பயன்படுத்தி, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடக்காயாக பயன்படுத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (19.09.2022) நடந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு, இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்புகின்றார்கள்.
சர்வதேச நாடுகளை பொருத்தவரையில் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தமிழர்களின் விடயங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கு பகடக்காயாக பயன்படுத்துவதாக நான் பார்க்கின்றேன்.
சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம் புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து கோரிக்கை முன்வைத்த போதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகின்றது.
தற்போது வந்துள்ள பரிந்துரையில் பல விடயங்கள் இருந்தாலும், தீர்மானம் ஒன்று நிறைவேறும் போது, பிரேரணை எந்தவித பயனும் இல்லாத ஒன்றாக காணப்படும்.
இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும், ஐ.நா பரிந்துரைகளுக்கும் தீர்மானங்களையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தற்போதைய பரிந்துரையின் போது அமைச்சர் அலி சப்ரி, தாங்கள் அதற்கு உடன்படமாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலையும், மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.



