பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள ரஷ்ய தூதுவருக்கு ஜனாதிபதி வாழ்த்துச்செய்தி

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி (Yury Materiy), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
யூரி மேட்டரி ஜனாதிபதியிடம் வழங்கியுள்ள உறுதி
இலங்கையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள போதும் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த தான் தொடர்ந்தும் பணியாற்றுவதாக யூரி மேட்டரி ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் அதேநேரம் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் என்ற வகையில், இலங்கையில் அவர் ஆற்றிய பணிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி விக்ரமசிங்க, அதற்காக தூதுவருக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
பதவிக்காலம் முடிந்து தான் இலங்கையை விட்டு வெளியேறினாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக யூரி மேட்டரி இதன்போது உறுதியளித்துள்ளார்.
மேலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



