இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!

தற்போது நடைமுறைப்படுத்தபட்ட இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களுக்கு முதல் 300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்தமையால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, ரயில்களுக்கான சிக்னல் அமைப்புகள் மற்றும் தொடர்புடைய உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதால், தொடருந்து விபத்துகள் குறித்து தீவிர கவலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இரும்பு, அலுமினியம், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்ட கட்டுமானத்துறையில் உள்ள பல உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், பாரிய அளவிலான கட்டுமான நிறுவனங்களின் செயற்பாடுகள் 60 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காகிதம், அட்டை, செய்தித்தாள் மற்றும் புத்தகத்துறைகளில் வேலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் புபுது ஜயகொட எச்சரித்துள்ளார்.



