காற்றுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும்!

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்றுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல இடங்கலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்தறை மாவட்டத்தின் கொடபொல பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் 156.5 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தெனியாய பகுதியில் 127 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் காலி - நெலுவ பகுதியில் 118 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.



