தெற்காசியாவின் உயரமான கோபுரத்துக்கு ஏற்பட்ட நிலை!

Nila
4 years ago
தெற்காசியாவின் உயரமான கோபுரத்துக்கு ஏற்பட்ட நிலை!

அபிவிருத்தி திட்டங்கள் என சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் இன்று நாட்டிற்கு சுமையாகியுள்ளதுடன் அவை பெரும் கடன் சுமையை உருவாக்கியுள்ளன.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை இன்று எதிர்க்கொண்டுள்ள நிலையில் வருமானத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திட்டங்கள் கூட பயனற்றதாகியுள்ளது.

அவ்வாறானதொன்றாகவே தாமரைக் கோபுரம் காணப்படுகின்றது. தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது வரையில் எவ்விதமான பயனும் நாட்டிற்கு கிடைக்கப்பெற வில்லை.

கொழும்பு மத்திய பகுதியில் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமரை கோபுர நிர்மாணத்திற்காக 104.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சீனாவினால் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றதுடன், எஞ்சிய தொகையை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு செலவிட்டுள்ளது. 356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19 ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்வதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுரஅடி என அளவிடப்பட்டுள்ளது. சுமார் 200 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் இந்த இடத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கோபுரத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளி, ஒலிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

தாமரை கோபுரத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் வைபவங்களை நடத்துவதற்கான மண்டபங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 6 ஆவது மாடியே மிகவும் சிறப்பு இடத்தை பிடிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 6வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள உணவகமானது, சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


உணவு உட்கொண்ட வண்ணமே கொழும்பு நகர் முழுவதையும் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இதனூடாக மக்களுக்கு கிடைக்கிறது. 7ஆவது மாடியானது, கோபுரத்தின் உயரமான இடத்திற்கு சென்று கொழும்பு நகரின் அழகை கண்டுகளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7ஆவது மாடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கோபுரமானது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை வழங்கும் கோபுரமாக உள்ளமை சிறப்பம்சமாகும். 8 மின்தூக்கிகளை கொண்ட இந்த கோபுரத்தில் நொடிக்கு 7 மீட்டர் உயரும் இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி பொருத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கையின் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் இனிவரும் காலங்களில் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டதுடன் இலங்கை தேசிய பொருளாதாரத்திற்கு பாரியளவில் நன்மையளிக்கும் என கருதப்பட்டது.


ஆனால் இன்றளவில் நாட்டிற்கு பயனுள்ளதாக தாமரைக் கோபுரம் அமைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4