சரத் வீரசேகர ஒரு மனநோயாளி

Kanimoli
4 years ago
சரத் வீரசேகர ஒரு மனநோயாளி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடியால் எரிபொருட்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நாள் கணக்காக வரிசையில் காத்திருக்கும் செயற்பாடுகளால் சரத் வீரசேகர எம்.பி போன்றவர்கள் அங்கம் வகிக்கும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு வாக்களித்த மக்களே கடும் கோபத்தில் உள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மக்களின் கோபத்தை திசை திருப்புவதற்காக இனவாத கருத்தினை பரப்பும் சரத் வீரசேகர ஒரு மனநோயாளி. எங்களுடைய போராட்டம் என்பது எமது நிலத்திற்காகவும் எமது இனத்தின் விடுதலைக்காகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில் எங்களுடைய தேசத்தில் இருக்கின்ற நிலத்தையும் எங்களுடைய பூர்வீக சொத்துக்களையும் பூர்வீகமான வரலாறு சொல்லுகின்ற நிலங்களையும் அபகரிக்கும் நிலையில் தென்னிலங்கையில் இருக்கின்ற சரத் வீரசேகர போன்ற ஒரு சில பேர் இனத் துவேசத்தை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்த விடயத்தை கொண்டு இப்பொழுது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான மக்களுடைய கிளர்ச்சியை திசை திருப்புவதற்கு ஒரு யுக்தியாக கையாளுகிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு மனநோயாளி என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அவர் அமைச்சராக இருக்கின்ற போது கூடுதலாக இந்த நாட்டில் வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களைச் சார்ந்த பிரச்சனைகளை மிகவும் மோசமாக நாடாளுமன்றத்தில் பேசி வந்தது காணக்கூடியதாக இருந்தது.

அந்த வகையில் எங்களுடைய சொத்தான குருந்தூர் மலையில் பௌத்த விகாரை வைப்பதை தடுப்பது என்பது எமது உரிமை. சரத் வீரசேகரவிற்கு அந்த இடத்தில் உரிமை இல்லை என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். குருந்தூர் மலை போராட்டத்தில் கலந்து கொண்டு நாங்கள் ஆதரவளிப்பது என்பது பெரிய விடயம் அல்ல.

ஆனால் இலங்கை அரசாங்கம் எங்களுடைய இனப்பிரச்சினை சம்பந்தமாக சில விடயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருந்தது. ஆகவே இந்தப் போராட்டத்திலே இளைஞர்கள் பொது மக்கள் கலந்து கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்று சரத் வீரசேகர பொங்கி எழுவார்.

இந்த குருந்தூர் மலையில் எங்களுடைய உரித்தை உரிமையை நாங்கள் தட்டி இருக்கின்றபோது சிங்கள மக்களுடைய மௌனத்தை சோதிக்க வேண்டாம் என்று சிங்கள மக்களுடைய ஆதரவு இல்லாத, சிங்கள மக்கள் எதிர்க்கின்ற சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் நகைச்சுவையாக ஒரு ஜோக்கரை போல போல பேசியிருப்பது நகைப்பிற்குரியது. எங்களைப் பொறுத்தமட்டில் சிங்கள மக்கள் எமக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை போராட்ட காலத்தில் நாங்கள் நிரூபித் திருக்கின்றோம்.

கடைசியாக முள்ளிவாய்க்கால் சமரில் விடுதலைப் புலிகள் நினைத்திருந்தால் சிங்கள மக்களை எதிரியாக கருதி இருந்தால் சிங்கள மக்கள் மீது தாக்குதலை நடத்தி இந்த போராட்டத்தை திசை திருப்பி இருக்க முடியும். அவர்கள் போராட்டத்தில் சிங்கள மக்கள் மீது நேசக்கரம் நீட்டி சிங்கள மக்கள் எங்களுக்கு எதிரி இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

அதேபோல் போராட்டத்தில் இருக்கின்ற அத்தனை இயக்கங்களும் தமிழ் பேசும் மக்களும், சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தொடர்ந்தும் சிங்கள மக்களோடு கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது.

ஆகவே சரத் வீரசேகர போன்றவர்கள் இனியும் இனவாதம் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தல்களிலும் இவ்வாறு இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி தான் தேர்தலில் வெற்றி பெற்றார்கள் இவர்கள் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்கள் மத்தியில் முன்வைத்து வெற்றி பெறவில்லை.

சரத் வீரசேகர போன்றவர்களின் இனவாத கருத்துக்களை சிங்கள மக்கள் கேட்கக்கூடாது. இவ்வாறான கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது என்பதை நான் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

சிங்கள மக்களை இனியும் இனவாதத்தை பேசி வாக்குகளை பெற முயற்சிக்காதீர்கள் உங்களுக்கு அது பகல் கனவாகவே தான் இருக்கும். ஆகவே எங்களுடைய தேசத்தில் எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை எங்களுடைய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை அணு அளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சரத் வீரசேகர இனியாவது வாயை மூடிக்கொள்ள வேண்டும். சரத் வீரசேகர கூறிய கருத்தை மீண்டும் அவருக்கு நான் கூறுகிறேன். சிங்கள மக்களை நீங்கள் சீண்டி பார்க்காதீர்கள். சிங்கள மக்கள் ஒரு போதும் உங்களுடைய பக்கம் வரமாட்டார்கள். சரத் வீரசேகர சிங்கள மக்கள் கோபம் கொண்டால் சரத் வீரசேகர போன்றவர்கள் தாங்க மாட்டார்கள் என்பதை சரத் வீரசேகரவுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4