மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று(17) எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என்ற பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கமைய, இன்று அதிகாலை முதல் 2 கிலோ மீற்றர்களுக்கு அதிகமான நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
குறித்த செய்தியினை சக ஊடகவியலாளருடன் அறிக்கையிடச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் அங்கு மதுபோதையில் வருகை தந்த நபரொருவரால் தாக்குதலுக்கு உள்ளானார்.
அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரை எச்சரித்ததுடன், ஊடகவியலாளரால் மல்லாவி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.






