உணவின்றி தெருவில் உயிரிழந்த பொதுமகன்

வாழைச்சேனை பொது மைதானத்திற்கு பின்னால் உள்ள, பிரதேச சபைக்கு சொந்தமான ஒரு கட்டத்திற்கு அருகில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தெரிவித்தார்.
செங்கலடி புதிய வீதி கொம்மாதுறையைச் சேர்ந்த பிள்ளையான் கணேசமூர்த்தி (69 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறி சுமார் ஆறு நாட்கள் எனவும், உணவின்றி மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து, பசியின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் ஒட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சி.நியாஸின் உதவியுடன் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் குடும்பம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



