நுவரெலியாவில் விறகு எடுப்பதற்காகச் சென்ற இரண்டு பெண்களைக் காணவில்லை

நுவரெலியாவில், விறகு எடுப்பதற்காகச் சென்ற இரண்டு பெண்களைக் காணவில்லையென காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களைக் கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பெண்களும் தோட்டத்தில் தொழிலாளிகளாக தொழில் செய்து வந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவகுமார் ரூபிகா வயது 15, சிவலிங்கம் ஸ்ரீதேவி வயது 18 ஆகிய இரண்டு பெண்களுமே காணாமல் போனவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கடந்த 2 ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேரிப்பதற்காக சென்றனர் எனவும், மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதோடு, இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் தாய், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் கொழும்பு உட்பட சகல இடங்களிலும் தேடிய போதிலும், இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், அக்கரப்பத்தனை காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பெண்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்காத காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



