உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை விரைவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடைன் கையெழுத்து!

ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை விரைவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடைன் கையெழுத்திட்டார்.
இதன்மூலம், ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் இராணுவம் ஆயுதங்கள், பீரங்கி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ராணுவ டேங்க் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற சக்திவாய்ந்த மேற்கத்திய ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்திட அனுமதி அளிக்கப்படும்.
புதினின் மிருகத்தனமான போருக்கு எதிராக தங்கள் நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் உக்ரேனியர்களின் போராட்டத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன்-குத்தகை சட்டம் உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை துரிதப்படுத்த அரசாங்கத்தை அனுமதிக்கிறது.
உக்ரைனை ஆதரிப்பதற்காக கூடுதலாக 33 பில்லியன் டாலர்கள் நிதிக்கான கோரிக்கையை ஜோ பைடைன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இந்த முக்கியமான போர் முயற்சியில் நாம் தாமதிக்க முடியாது என்பதால் இப்போதைக்கு கொரோனா பேரிடருக்கான நிதி கோரிக்கைகளை கைவிட தயாராக உள்ளதாக கூறினார்.
இரண்டாம் உலகப் போரில் அடைந்தததை போல உக்ரைன் போரில் வெற்றி நமதே என்றும், உக்ரைன் மேற்கத்திய நாசிச படைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ரஷிய அதிபர் புதின் கடுமையாக குற்றம்சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் மாஸ்கோவில் ரஷிய ராணுவத்தின் மாபெரும் அணிவகுப்பை பார்வையிட்டார். இந்த செயல்கள் காரணமாகவே, அமெரிக்கா பதிலடி தரும் விதமாக உக்ரைனுக்கான ஆயுதங்கள் அளிக்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இதனை வரவேற்றுள்ளார். அவர் தனது டுவிட்டரில் “கடன்-குத்தகை தொடர்பான சட்டத்தில் இன்று கையெழுத்திட்டது ஒரு வரலாற்றுப் படியாகும். மீண்டும் இணைந்து வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளேன். 77 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஜனநாயகத்தை பாதுகாத்தது போல, உக்ரைனில் ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்றார்.



