இலங்கையில் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை பெற முடியாத நிலையில் 50 வீதமான பெண்கள் - : ஆய்வில் புதிய தகவல்

#Women #Health #prices
இலங்கையில் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை பெற முடியாத நிலையில் 50 வீதமான பெண்கள்  - : ஆய்வில் புதிய தகவல்

மாதவிடாய் சுகாதார பொருட்களுக்கு அறவிடப்படும் வரி காரணமாக இலங்கையிலுள்ள  பெண்களில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைப் பெற முடியாத நிலையில் உள்ளனர் என்பது புதிய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

மாதவிடாய் ஏற்படும் பருவத்திலுள்ள இலங்கைப் பெண்களில் 50 சதவீதமானோர், மாதவிடாய் சுகாதாரப் பொருட்களுக்காக பணம் எதையும் செலவிடுவதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

சுற்றாடல் மற்றும் ஊட்டச்சத்து அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் சமூகங்களுக்கு உதவுதல் (ACCEND) எனும் திட்டத்தின் கீழ் மேற்படி ஆய்வு வெளியிடப்பட்டது.

மாதவிடாய் பொருட்களுக்கு வரி அறவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் ஆரோக்கியத் துவாய்களுக்கான மற்றும் ஏனைய மாதவிடாய் பொருட்களுக்கான வரி 52 சதவீதமாக உள்ளமையானது சமூகத்தில்  குறைந்த வருமானம் பெரும் தரப்புகளைச் சேர்ந்த பெண்களால் கொள்வனவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ACCEND திட்டத்துக்காக அட்வோகேட்டா இன்ஸ்ரிரியூட்டினால் (Advocata Institute) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ADRA, Oxfam  ஆகிய நிறுவனங்களினால் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

மேற்படி ஆய்வறிக்கை மற்றும் கலந்துரையாடல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பில் அண்மையில் நடைபெற்றறது.

கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம், இலங்கைக்கான ஒக்ஸ்பாம் செயற்திட்ட முகாமையாளர் திலக் கருணாரத்ன, ADRA  நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் மத்தியூ விட்டி ஆகியோர் கையளித்தனர்.