திடீர் பனிப்புயல் - அமெரிக்காவில் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பனி புயல் ஏற்பட்டு உள்ளது. பனிக்காற்றும் வேகமுடன் வீசியுள்ளது. அது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்தியது.
இதனால், சாலையில் கார்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட 50 முதல் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. அதன்பின்னர் வாகனங்களில் இருந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
இதனையடுத்து, சாலையில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தும் பாதித்தது. வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தங்களுடைய வாகனங்களை விட்டு கீழே இறங்கி வெளியே வந்தனர். இந்த வாகன மோதலில் 3 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
இந்த விபத்தினால், சாலையில் பல மைல்கள் தொலைவுக்கு வாகனங்கள் தேங்கி நின்றன. இதனால், சம்பவ பகுதிக்கு மீட்பு படையினர் மற்றும் அவசரகால குழுவினர் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது.
எனினும், தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில், ஷுயில்கில் கவுன்டி பகுதியில் நடைபெறும் இரண்டாவது மிக பெரிய வாகன மோதல் இதுவாகும்.
இந்த பகுதியில் அடிக்கடி பெரிய அளவில் பனி புயல் வீச கூடும். இதனால், தெளிவற்ற வானிலை காணப்படும். அதனால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டுமென தேசிய வானிலை சேவை அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.