இலங்கையில் 3 தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே கோவில் செல்ல அனுமதி!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் பங்குனி திங்கள் பொங்கல் விழா நடைபெறும் கோவில்களில் 3 தடுப்பூசிகளையும் பெற்ற பக்தர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என தென்மராட்சி சுகாதார பிரிவினர் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவித்திருக்கின்றனர்.
எனவே அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறும் கோவில் நிர்வாகிகளுக்கு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கமைய கோவில் வாயிலில் கடமையிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 3 தடுப்பூசிகளையும் ஏற்றிய தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பக்தர்களை மட்டும் உள்ளே செல்வதற்கு அனுமதிப்பார்கள்.
அதேவேளை பரிசோதனையில் 3 தடுப்பூசிகளையும் செலுத்தாத பக்தர்கள் கோவிலுக்கு உட்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் அன்னதானம் பொதி செய்து வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அன்னதானத்திற்கான சமையலில் ஈடுபடுவோரும் 3 தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணியகத்தின் மருத்துவ சான்றிதழ் பெற்றவர்களாகவும் இருத்தல்வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.
இதேவேளை யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சபம் வெகு சிறப்பாக இடம்பெறுவது வழமை. இதற்காக யாழ் மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாது வேறு பிரதேசங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.



