தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரர் டாக்டர்.சுந்தரம்பிள்ளை கந்தசாமி அவர்களின் அஞ்சலி நிகழ்வு

Prasu
4 years ago
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரர் டாக்டர்.சுந்தரம்பிள்ளை கந்தசாமி அவர்களின் அஞ்சலி நிகழ்வு

ஈழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், தன் இறுதி மூச்சு வரை உறுதியாக தமிழ் இன விடுதலையை நேசித்தவரும், பலமுறை சிறை சென்று சித்திரவதைகளுக்கு ஆளாகிச் சிறை மீண்டவருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரர் டாக்டர்.சுந்தரம்பிள்ளை கந்தசாமி(கந்தா)கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை சுகவீனம் காரணமாக இந்தியாவின் சென்னையில் காலமாகியிருந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(13.3.2022) சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் அவரது மூத்த சகோதரரான அமரர் சு.கந்தசாமி (கந்தா) ஆகியோரின் இல்லம் அமைந்துள்ள இடமான யாழ்.கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்திற்கு அருகில் இன்று முற்பகல்-11 மணிக்கு அஞ்சலி நிகழ்வொன்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மெளன வணக்கம், ஈகைச் சுடரேற்றல், உருவப் படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி,மற்றும் அஞ்சலி உரைகளும் நடைபெற்றன.

மேற்படி அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தென்மராட்சி டெலோ அமைப்பாளர் ப. சூடாமணி,  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான  பொ.ஐங்கரநேசன், பிரபல சட்டத்தரணி ஏ.இராஜரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி உரைகள் நிகழ்த்தினர்.

அஞ்சலி நிகழ்வில் ரெலோவின் மூத்த போராளிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தகவல் ப.சூடாமணி தென்மராட்சி அமைப்பாளர்

சிறீயின் சகோதரர் சுந்தரம்பிள்ளை கந்தசாமி (கந்தா)f  அண்ணர் 1968/69 காலப்பகுதியில் பருத்தித்துறையில் மருந்துக்கடை வைத்திருந்தார். அருகே கண்ணாடி பத்மநாதன் (பின்பு செட்டியால் கொலை செய்யப்பட்டார்)  றேடியோ திருத்தும் கடை வைத்திருந்தார். இருவரும் நண்பர்கள், இனப் பற்றாளர்கள். 1970 ல் கல்வியங்காட்டில் உள்ள இவரது வீட்டில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்திருந்தார். 15 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  அனேகரது கருத்தும்  தீவிரப் போராட்டம் பற்றியதாக இருந்தது. அப்போது சிறீயும் நின்றிருந்தார்.  1972  ல் திருநெல்வேலி சேர்மன் கொலை வழக்கில் சந்தேகத்தில் தேடப்பட்டு தலைமறைவானார். 1974 ல் திருக்கேதீஸ்வரத்தில் ஒழித்திருந்தபோது கைது செய்யப்பட்டு 1977 வரை சிறையில் வாடினார். பின் சிறீ சிறையில் இருந்து வந்தபின் தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டு ரெலோவில் இயங்கினார். குட்டிமணி பிடிபட்ட போது இவரது வீட்டில் இருந்துதான் சிறீயுடன் புறப்பட்டார்களாம். அன்றிலிருந்து இன்றுவரை ரெலோவின் செயற்பாட்டாளராக வாழ்ந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4