கடன் செலுத்த முடியாத நிலையில் இலங்கை – CC தரத்திற்கு குறைக்கப்பட்டது.

#SriLanka
Nila
2 years ago
கடன் செலுத்த முடியாத நிலையில்  இலங்கை  – CC தரத்திற்கு குறைக்கப்பட்டது.

வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதற்கு இலங்கைக்கு காணப்படுகின்ற இயலுமை தொடர்பில் ஃப்ட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஃப்ட்ச் ரேட்டிங் நிறுவனம், இலங்கையை தர வரிசையிலிருந்து ஒரு படி குறைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

26 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை செலுத்த தவறிவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே, CC என்ற தரத்திற்கு இலங்கையை அந்த நிறுவனம் குறைத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, அந்நிய செலாவணி பற்றாக்குறையினால், இலங்கை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1.5 வீத வீழ்ச்சியை அறிவித்து ஒரு தினத்திற்கு பின்னர், இந்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த நவம்பர் மாத இறுதியில் 1.58 பில்லியன் டொலர் என கூறப்பட்டது.

புதிய வெளிநாட்டு நிதி உதவிகள் இல்லாமையினால், 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் கடன் செலுத்தும் சவாலை சந்திப்பது கடினமானது என தாம் நம்புவதாக அந்த நிறுவனம் கூறுகின்றது.

2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலரையும், 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 1.0 பில்லியன் டொலரையும் மீள செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகின்றது.

2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலம் வரை அசல் மற்றும் வட்டி என மொத்த வெளிநாட்டு நாணயக் கடனாக 26 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டதை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அந்நிய செலாவணியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் நிறுவனம் கூறுகின்றது.