கனடாவில் தீவிரவாதி போல் போலியாக நடித்த நபர் விடுதலை!

தான் ஐ.எஸ் அமைப்பில் இருந்ததாகவும், பலரை கொலை செய்ததாகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நபரின் வேஷம் கலைந்தது.
’நான் அவரை பலமுறை கத்தியால் குத்தவேண்டியிருந்தது, பின்னர் அவரை நாங்கள் சிலுவை ஒன்றின்மீது கிடத்தினோம், நான் அவரது இதயத்தில் என் கத்தியை செலுத்தினேன்’
இந்த பயங்கர வார்த்தைகள் ஐ.எஸ் அமைப்பிலிருந்ததாக கூறிய ஒருவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி.
அபு ஹுசாய்ஃபா என்ற பெயரால் பிரபலமாக அழைக்கப்பட்ட அந்த நபர், பிரபல ஊடகம் ஒன்றின் ஆவணப்படம் ஒன்றில் தோன்றினார்.
2016ஆம் ஆண்டு, ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக தான் சிரியாவுக்கு சென்றதாகவும், பல்வேறு தீவிரவாத செயல்களில் தான் ஈடுபட்டதாகவும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் அபு.
அத்துடன், தான் தனது கனடா பாஸ்போர்ட்டுக்கு பதிலாக, பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததாகவும், துருக்கி வழியாக பாகிஸ்தானுக்குத் திரும்பி, பிறகு கனடாவுக்கு திரும்பிவிட்டதாகவும் கூறியிருந்தார் அவர்.
அவரது பேட்டிகள், பல ஊடகங்களில் பரவலாக வெளியானதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்வியையும் எழுப்பின.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு பிரிவு பொலிசார் அவரைப் பிடித்து நீண்ட விசாரணைக்குட்படுத்தினர்.
விசாரணையில், அந்த நபரின் உண்மையான பெயர் ஷெரோஸ் சவுத்ரி (25) என்பது தெரியவந்தது.
பாகிஸ்தான் வம்சாவளியினரான அவர் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர். போலியாக தான் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததாகவும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் கதைவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
தனது போலியான பேட்டிகளால், நாட்டின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளார் அவர்.
எனவே, 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சவுத்ரியை கைது செய்த பொலிசார், அவர் மீது தீவிரவாத செயல்கள் தொடர்பான புரளி கிளப்பியதாக குற்றச்சாட்டு பதிவு செய்தார்கள்.
இந்நிலையில், தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக சவுத்ரியின் சட்டத்தரணியான Nader Hasan தெரிவித்துள்ளார்.
தன் கட்சிக்காரரின் தவறுகள் அச்சுறுத்தும் நோக்கிலானவை அல்ல, அவை முதிர்ச்சியின்மையின் விளைவாக செய்யப்பட்டவையேயொழிய, குற்ற நோக்கிலானவை அல்ல என்று கூறியுள்ளார் Hasan.



