கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தந்து, தனக்கு உயிர் கொடுத்த தந்தையின் உயிரை காப்பாற்றிய மகன்

சில மாதங்களே உயிருடன் இருப்பார் என டாக்டர்கள் கூறிய நிலையில், தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தந்து, தனக்கு உயிர் கொடுத்த தந்தையின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் கோல்கட்டாவைச் சேர்ந்த இளைஞர்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு தந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், ஆறு மாதங்கள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.இதனால், அவருடைய குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது. ஒரு பக்கம் சிகிச்சை நடந்து வந்த நிலையில், தந்தைக்கும், அவருடைய மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.வீட்டில் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். சேர்ந்து விளையாடி பொழுதைப் போக்கினர். அப்போது, தன் தந்தையின் நிலை குறித்து மகன் மிகவும் வருத்தம் அடைந்தார்.
தந்தையின் உயிரைக் காப்பாற்ற எதையும் செய்யலாம் என முடிவு செய்தார்.கொரோனாவில் இருந்து மீண்ட உடன், தன் கல்லீரலை தந்தைக்கு தானமாக வழங்க மகன் முன்வந்தார். ஆனால், கொழுப்பு சத்து அதிகம் இருந்தது. அதையடுத்து உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு வாயிலாக கொழுப்பைக் குறைத்தார் மகன்.பின், டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, மகனின் 65 சதவீத கல்லீரலை எடுத்து, தந்தைக்கு பொருத்தி உள்ளனர். சிகிச்சைக்கு பின், இருவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்.உயிர் தந்த தந்தைக்கு இதைவிட பெரிய பிரதிபலனை செய்ய முடியாது என, கண்ணீரில் மகன் திளைத்தார்.தன் உயிரைக் காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த மகன் குறித்து தந்தையும் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.குடும்பம், பாசம், தியாகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இந்த தந்தை, மகன் விளங்குகின்றனர் என, நண்பர்களும், உறவினர்களும் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.



