விலங்குகளின் தோல்களுக்கு பதிலாக மேகலாயாவில் அன்னாசிப்பழத்தில் இருந்து சைவத் தோல்:ஆய்வு

நமது அன்றாட வாழ்க்கையில் தோல் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆடு, மாடு, மான் உள்ளிட்ட பல விலங்குகளின் தோல்களைப் பயன்படுத்தி அழகிய பைகள், கைப்பைகள், கடிகாரப்பட்டைகள், பெல்ட், குளிர் கால பயன்பாட்டிற்கான தோலினாலான உடைகள், செருப்புகள், என பலவிதமான தோல் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், விலங்குகளின் தோல்களுக்கு பதிலாக செயற்கை தோல்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சைவ தோல் (Vegan Leather) என்பது விலங்குகளின் தோலைப் போலவே தோற்றம் அளிக்கும் ஒரு பொருளாகும், இது விலங்குகளின் தோலுக்குப் பதிலாக தாவரப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட பொருளாகும். இதன் பயன்பாடு குறித்தும் இப்போது பேசப்பட்டு வருகிறது.
மேகலாயாவில் அன்னாசிப்பழத்த்தில் இருந்து சைவத் தோல் தயாரிக்க முடியுமா என ஆய்வு நடத்தவும், மக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க மேகாலயா அரசு திட்டமிட்டுள்ளதாக மேகலாயாவின் வன மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மின்சக்தி அமைச்சர் ஜேம்ஸ் சங்மா கூறினார்.
TiE ஹைதராபாத் ஏற்பாடு செய்த ‘TiE Sustainability Summit 2021’ என்ற மாநாட்டில், உரையாற்றிய சங்மா, பள்ளி பாடத்திட்டத்தில் பருவநிலை மாற்றத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேகாலயா இந்தியாவில் அன்னாசிப்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த அன்னாசிப்பழத்தில் 8 சதவிகிதம் மேகாலயாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அன்னாசிப்பழம் மாநிலத்தின் மிக முக்கியமான பழப் பயிராக உள்ள நிலையில், அதிலிருந்து செயற்கை தோல் தயாரிப்பது தொடர்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறது.
76 சதவிகித நிலங்கள் காடுகளாக இருப்பதைக் குறிப்பிட்ட சங்மா, மேகாலயா உயிரியல் பன்முகத்தன்மையின் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாகும் என்றும் அது ஒரு தனித்துவமான வனப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.
"காலநிலை மாற்ற அருங்காட்சியகத்தின் மூலம் காலநிலை நெருக்கடியை தீர்க்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கப்படும். காலநிலை மாற்றம் நம் காலத்தின் மிகப்பெரிய சவால். அதை எதிர்த்து போராட நாம் இணைந்து பணியாற்ற வேண்டும், 'என்றார்.



