6 மணிநேர பேஸ்புக் முடக்கத்தால் ஏற்பட்ட விளைவு

நேற்று மாலை முதல் இரவுவரை அதாவது 6 மணித்தியாலத்துக்கும் மேலாக உலகம் முழுவதும் திடீரென சமூக வலைத்தளங்கள் முடங்கின.
குறிப்பாக பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிமிடம் இயங்கும், மறுநிமிடம் இயங்கும், 5 நிமிடத்தில் இயங்கும் என பயனர்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் 6 மணி நேரத்திற்கும் மேலாக இயங்காமையால் பயனர்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. 6 மணி நேர முடக்கத்துக்கு பின்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன.
பேஸ்புக் நிறுவனத்தின் 6 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் ( இந்திய மதிப்பில் சுமார் 44 ஆயிரம் கோடி) டொலரை இழந்துள்ளார்.
இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் அதாவது 5 இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நேற்று மட்டும் பங்கு சந்தையில் 4.9 சதவீதம் அளவுக்கு பேஸ்புக் நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. செப்டம்பர் பாதிக்குப் பின்னர் அந்நிறுவனங்களின் பங்குகள் 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. மார்க் சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டொலரில் இருந்து 121.6 பில்லியன் டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.




