உலகத் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த கிரேட்டா

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான கிரேட்டா தன்பெர்க் (Greta-Thunberg ) எனும் 18 வயதான சமூக நல ஆர்வலர் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து சர்வதேச அளவிலான மாநாடுகளில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் இத்தாலியின் மிலன் நகரில் அண்மையில் நடைபெற்ற , பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக “இது போன்ற மாநாடுகளை நடத்துவதன் மூலம் இளம் தலைமுறையினரின் கோரிக்கைகள் கேட்கப்படுவதாக உலகத் தலைவர்கள் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறினார்.
மேலும், “மனிதர்கள் வாழ ஒரே ஒரு பூமி தான் இருக்கிறது. அதனால் நமக்கு இருக்கும் ஒரே வழி இப்பூமியை பாதுகாப்பது மட்டுமே. உலகத் தலைவர்கள் அதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.



