இலங்கையில் சிறுவர்கள் கொவிட் தொற்றில் உயிரிழப்பதற்கான காரணம் வெளியானது !

கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்கள், தாமதமாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றமையே, சிறுவர்கள் கொவிட் தொற்றினால் உயிரிழப்பதற்கான பிரதான காரணம் என சிறுவர்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் இதுவரை 53,000 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளான சிறார்கள் 64 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
2020ம் ஆண்டு இரு சிறார்கள் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகவும், இந்த ஆண்டிலேயே எஞ்சிய 62 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
உயிரிழந்தவர்களில் ஒரு வயதுக்கு குறைவான 31 சிறுவர்களும், 16 சிசுக்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஒரு வயது முதல் 5 வயதுக்கு இடைப்பட்ட 14 சிறுவர்களும், 6 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட 12 சிறுவர்களும் இவர்களில் அடங்குவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், 13 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட 07 சிறுவர்கள் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
உயிரிழந்த 64 சிறுவர்களும் வீடுகளில் இருந்தவர்கள் எனவும், அவர்களில் 33 சிறுவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாகவே, இந்த சிறுவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளமை, நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.



