புகையிரத பயணிகளின் நெரிசலை குறைக்க இந்தியாவிடமிருந்து 160 புகையிரத பெட்டி இறக்குமதி

#India
Prasu
3 years ago
புகையிரத பயணிகளின் நெரிசலை குறைக்க இந்தியாவிடமிருந்து 160 புகையிரத  பெட்டி இறக்குமதி

புகையிரத பயணிகளின் நெரிசலைக் குறைத்து பொதுமக்களுக்கு வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 160 புகையிரத பெட்டிகளை இங்கு கொண்டு வருகின்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசூரிய தெரிவித்தார்.

புகையிரத சேவையினை அபிவிருத்தி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களை அறிவுறுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே பொது முகாமையாளர் இதனை தெரிவித்தார்.

குறித்த ஊடக கலந்துரையாடல்  அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

கொள்வனவு செய்த புகையிரத பெட்டிகளில் 50 பெட்டிகள் தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.ஏனைய பெட்டிகளையும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தூர பிரயாணத்திற்காக 550 ஆசனங்களுடன் கூடிய குளிரூட்டப்பட்ட புகையிரதமொன்றை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய வாகன நெரிசலுக்கு ஓர் நடைமுறை தீர்வாக புகையிரத சேவையினை விருத்தி செய்வது, முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய தேவையென சுட்டிக் காட்டிய பொது முகாமையாளர் இதற்காக பல விசேட வேலைத்திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவற்றில் பிரதான புகையிரத வீதியினை பத்தரமுல்லை வரை நீடித்தல், மின்சார புகையிரதங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தல் என்பவை முதன்மை வகிக்கின்றது.

அரச ஊழியர்களின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கும், கொழும்பில் சன நெரிசல் கொண்ட பிரதேசங்களில் காலை வேளையில் வாகன நெரிசலுக்கான தீர்வாக தலைநகரம் வரை புகையிரத வீதியினை விரிவுபடுத்த வேண்டும் என்பதும் இனங்காணப்பட்டுள்ளது.

தற்போதைய புகையிரத பயணிகளில் சுமார் 70 சதவீதமானவர்கள் பாணந்துரையிலிருந்து வெயங்கொடை மற்றும் பொல்கஹவெலயிலிருந்து களுத்துறை வரையான பிரதேசங்களில் பயணிக்கின்ற பயணிகளுக்காக மின்சார புகையிரதங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் மூலம் தற்போது அப்பிரதேசங்களில் மையமாகக் கொண்டு பயணிக்கின்ற பயணிகளின் எண்ணிக்கையினை 06 இலட்சம் வரை அதிகரிக்க முடியுமாக இருக்கும். பொல்கஹவெலயிலிருந்து குருநாகல் மற்றும் மஹவை வரையும், தெற்கு பயாகலயிலிருந்து அளுத்கமை வரையும், களனிவெலி வீதியில் ஹோமாகமை வரையும் இருவழி புகையிரத வீதிகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் இலங்கை புகையிரத சேவைக்கு விசேட இடமுண்டு என்று குறிப்பிட்ட பொது முகாமையாளர் 1864ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு கோட்டை – அம்பேபுஸ்ஸ வரையான முதலாவது புகையிரத சேவையினை நினைவு கூறும் வகையில் இரு நகரங்களுக்குமிடையில் நிலக்கரி புகையிரத சேவையொன்றை ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

கொரோனா தொற்றினால் பயணிகள் புகையிரத போக்குவரத்து இடம்பெறாத போதும் எரிபொருள் மற்றும் பொருட்கள் போக்குவரத்திற்காக அன்றாடம் 08 புகையிரதங்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் போது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளுக்கு அமைவாக மாகாணத்திற்குள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் தயார் நிலையில் இருப்பதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசூரிய அவர்கள் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!