காணாமல் போனோருக்கு விரைவில் மரண சான்றிதழ்: ஐ.நா பொது செயலரிடம் ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம், நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஆதரவை அளிக்கும் என்று கூறியுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரெஸிடம் தெரிவித்துள்ளார்
பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பலர், தாம் ஆட்சிக்கு வந்தமையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை நாட்டின் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்த்து கொள்ள முடியும் எனவும் அதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுவதற்காக அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.



