ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 89 கைதிகள் விடுதலை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 89 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 89 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட கைதிகளில் மஹர சிறைச்சாலையின் 10 கைதிகளும், போகம்பர சிறைச்சாலையின் 07 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையின் 05 கைதிகளும் அடங்குவர்.
ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்ட கைதிகள் நேற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்
சோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பிறகு சிறைச்சாலைத் திணைக்களம் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத கைதிகளை மட்டுமே விடுவிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி நேற்று அறிக்கைகளைப் பெற்ற கைதிகள் குழு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய கைதிகளின் அறிக்கைகள் இன்று வர உள்ளதாகவும், அவர்கள் பரிசோதிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவில்லை.
அவரை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



