சீனாவிற்கு தலிபான்களுடன் பிரச்சினை உள்ளது, அமெரிக்க ஜனாதிபதி தெரிவி்க்கிறார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது தலீபான்கள் தங்களது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். முன்னதாக தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் முதலாவதாக சீனா தானதனது ஆதரவைத் தெரிவித்தது. அதேபோல் தலீபான்களும் சீனா தங்களின் மிக முக்கிய நண்பன் என தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தலீபான்களுடன் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தலீபான்களுக்கு சீனா நிதியுதவி செய்வது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானதா என ஜோ பைடனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜோ பைடன் "தலீபான்களிடம் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்ய சீனா சில ஏற்பாடுகளை செய்ய முயன்று வருவதை உறுதியுடன் கூற முடியும்" என கூறினார்.
மேலும் அவர் சீனாவை தவிர பாகிஸ்தான், ரஷியா மற்றும் ஈரான் போன்ற அண்டை நாடுகள் தலீபான்களுடன் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.



