திருடனுக்கு எதிராக திரும்பிய முகக்கவசம்!!

திருடன் ஒருவன் விட்டுச்சென்ற முகக்கவசம் ஒன்று, அவனுக்கு எதிராக திரும்பிய சுவாரஷ்யமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் Maxéville (Meurthe-et-Moselle) நகரில் கடந்த மாதம் ஓகஸ்ட் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 30 வயதுகளையுடைய திருடன் ஒருவன் ஓய்வூதியம் பெறும் ஒருவரது வீட்டுக்கு திருட சென்றுள்ளான். நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து, வங்கி அட்டைகள் மற்றும் நகைகளை திருடியபோது, குறித்த முதியவர் எழுந்துகொண்டார்.
இதனால் திருடன் அங்கிருந்து நகைகளுடன் தப்பி ஓடியுள்ளான்.
காவல்துறையினர் அழைக்கப்பட்ட போது, திருடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். சம்பவ இடத்தில் இருந்து முகக்கவசம் ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
பின்னர் சிலமணிநேரங்களில் திருடன் கைது செய்யப்பட்டான். நீதிமன்றத்தில் அவன் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தமது குற்றத்தை திருடன் மறுத்துள்ளான்.
ஆனால் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட திருடனின் முகக்கவசத்தை கொண்டு ‘மரபணு பரிசோதனை’ (DNA) மேற்கொள்ளப்பட்டு திருட்டில் ஈடுபட்டது அவன் தான் என உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை காவல்துறையினர் சமர்ப்பித்தனர். அதை அடுத்து நேற்று செப்டம்பர் 6 ஆம் திகதி, திருடனுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



