தலிபான் ஆட்சியில் யார் யாருக்கு இடம் வெளியான அறிவிப்பு!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர். பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் ஒரு வழியாக கைப்பற்றிய தலிபான்கள், புதிய அரசு அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசில் இடம் பெற்று உள்ளவர்கள் குறித்த விபரங்களை, தலிபான் அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் இன்று வெளியிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் செயல்படும் அரசு செயல் (Acting Government) அரசாக இருக்கும். இந்த அரசின் செயல் பிரதமராக, முல்லா முகமது ஹசன் அகுந்த் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து, செயல் துணை பிரதமராக முல்லா அப்துல் கனி பரதர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆப்கன் அரசின், செயல் வெளியுறவுத் துறை அமைச்சராக அமீர் கான் முத்தாகியும், செயல் துணை வெளியுறவுத் துறை அமைச்சராக அப்பாஸ் ஸ்டானிக்ஜாயும் நியமிக்கப்பட்டு உள்ளனர். செயல் ராணுவ அமைச்சராக முல்லா யாகூப் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க, முல்லா முகமது ஹசன் அகுந்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு, பெண் உரிமை, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில், எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



