ஆப்கனில் பசியால் வாடும் குடிமக்களுக்கு உதவ நிதி திரட்டும் ஐநா.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு விரைவில் அரசியல் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது. இந்நிலையில் அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் உணவு மற்றும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பெற்றோர்களுடன் வசிப்பிடம் இன்றி தவிக்கின்றனர். அடுத்த வேளை உணவுக்கே அல்லாடும் ஆப்கன் குடிமக்கள் இனி தங்கள் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது என்று தெரியாமல் தத்தளித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியதை அடுத்து நிலைமை இன்னும் மோசமாகி விட்டது என்று ஐநா தகவல் அளித்து உள்ளது. இதனையடுத்து ஐநா., தலைவர் அன்டோனியோ கட்டர்ஸ் உலக நாடுகளிடையே ஆப்கானிஸ்தானுக்கு நிதி திரட்ட ஓர் முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளார்.
டென்மார்க், கஜகஸ்தான், வடக்கு மாசிடோனியா, பாகிஸ்தான், போலாந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாட்டு பிரதிநிதிகளுடன் அவர் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா., விரைவில் உதவத் திட்டமிட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டதால் தலைநகர் காபூலில் இருந்த ஐநா., தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



