தமிழகத்திலுள்ள அகதிகள் குறித்து, அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை - ரமேஷ் பத்திரண

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை அழைத்து வரும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழகத்திலுள்ள அகதிகள் குறித்து, அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. அகதிகளை அழைத்து வரும் நடவடிக்கைகள் சில காலங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டிற்கு அழைக்கும் விதத்தில் கடந்த 28ம் திகதி TWITTER பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.
எனினும், அகதிகளை அழைத்து வரும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண இன்று (31) கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை எதிர்கொள்ளும் விதம் குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானமொன்றை எட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



