ஆப்கனிலிருந்து இந்தியா திரும்பிய 146 பேரில் இருவருக்கு கொரோனா உறுதி

ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்ட 146 பேரில், இருவருக்கு இன்றைய தினம் கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, அங்கிருக்கும் வெளிநாட்டவர்களை அந்தந்த நாட்டு அரசுகள் விமானங்கள் மூலம் தாயகத்துக்கு அழைத்து வருகின்றன. அதன்படி இந்திய அரசு கடந்த 15 ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து அடுத்தடுத்து இந்தியர்களை அழைத்து வருகிறது. நேற்று மட்டும் 168 பேர் அழைத்து வரப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று 148 பேர் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தனர். கடந்த 14 ஆம் தேதி அமெரிக்க ராணுவத்தால் கத்தார் ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், இந்திய தூதரகம் மூலம் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுவரை அழைத்துவரப்பட்டவர்களில் ஆப்கானிஸ்தான் எம்பிக்கள் 2 பேரும், நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்த 146 பேரில் இருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக டெல்லியின் கொரோனா தடுப்பு அதிகாரி ராஜேந்தெர் குமார் கூறியிருக்கிறார். தற்போது இந்திய அரசின் கட்டுப்பாட்டுகளின்படி, வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்களை, கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரையில் முகாம்களில் தனிமைப்படுத்தும் வழக்கம் இருக்கிறது. அதன்படி இவர்களும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டே இருக்கின்றனர் என சொல்லப்படுகிறது.



