குமார் பொன்னம்பலம் பிறந்த நாள் 12-8-2021

குமார் பொன்னம்பலம் பிறந்த நாள் 12-8-2021

புகழ்பெற்ற இலங்கைத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து “இவன் தந்தை எந்நோற்றான் கொல்’ என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார். தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

சிங்கள இராணுவம், சிறப்பு அதிரடிப்படை, சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார். அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார்.

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பல அறிக்கைகளை அவர் அளித்துள்ளார். செம்மணி புதைகுழி போன்ற பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார். சிறைகளில் சித்திரவதை, கேள்விமுறையின்றி கைது செய்யப்படுதல், சட்டவிரோதமான படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு அட்டூழியங்களை ஐ.நா. மனித உரிமைக் கமிசன் முன் ஆதாரபூர்வமாக அளித்து சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார். பெல்ஜியத் தலைநகரான பிரசெல்ஸில் இயங்கும் ஐரோப்பிய நாடாளுமன்றம், இலண்டனில் உள்ள ராயல் நிறுவனம் மற்றும் பல்வேறு உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேராகச் சென்று புகார்களை அளித்தார்.

இவர் இறுதிவரை உயிரைப் பற்றிக் கவலைப்படாமலும் யாருக்கும் அஞ்சாமலும் தமிழர்களுக்காகத் தொண்டாற்றினார்.