இருபது பேரினால் மீண்டும் முடக்கப்படும் மெல்போன்
Yuga
3 years ago

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரம் மேலும் ஒரு வார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மெல்போன் நகரத்தை எதிர்வரும் 19ம் திகதி வரை முடக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 20 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களின் ஆரம்ப தொற்றாளரை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாததை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மெல்போன் நகரில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை, எதிர்வரும் புதன்கிழமை முதல் தளர்த்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
டெல்டா தொற்று காரணமாக சிட்னி நகரில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானத்தை எட்டியதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.



