இலங்கையில் பேருந்தில் பயணித்த பெண் திடீர் உயிரிழப்பு..!

பாணந்துறை பகுதியில் பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர், பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரணை நகரிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பஸ்ஸில் சென்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆசனத்தில் அமர்ந்தவாறு நித்திரை கொள்ளும் விதமாக இருந்த பெண் மீது நடத்துநருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த பெண்ணை நித்திரையிலிருந்து எழுப்ப நடத்துநர் முயற்சித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த பெண்ணிடமிருந்து எந்தவித அசைவுகளையும் அவதானிக்காத நடத்துநர், பெண்ணை அதே பஸ்ஸில் அழைத்து வந்து, பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், வைத்தியசாலையில் அனுமதித்த தருணத்தில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



