முகேஷ் அம்பானியின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட முல்லைத்தீவு பெண் - யார் இவர்

இலங்கையின் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்ற இடத்திலே வசிக்கும் சாயிராணி என்ற இந்தப் பெண்ணை உலக கோடிஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியால் தனது வியாபார சம்பந்தமான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். இவரின் தொழிற்திறமையை பாராட்டி இவரின் உற்பத்திகளை வெகுவாக பாராட்டுகிறார்.
2014 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேசிய பெண் முயற்சியாளர் என்ற போட்டியில் இவருக்கு இரண்டாம் இட பரிசு கிடைக்கிறது. தேசிய விருதையும் இவர் பெற்றார். இதற்காக இவருக்கு 2.5இலட்சம் ரூபா காசும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இதற்காக இவரை மேடைக்கு அழைத்த போது இவர் தனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று பல பிரமுகர்கள் மற்றும் ஜனாதிபதி கூடியிருந்த இடத்திலே கூறுகிறார்.
யுத்தம் நிகழந்த முல்லைத்தீவில் யுத்தம் நிகழ்ந்து தனது கணவனை இழந்து வவுனியா முகாமில் தனக்கு கிடைத்த நிவாரணத்தை 1300 ரூபாவிற்கு விற்று மரத்தின் கீழ் அப்பம் சுட்டு தனது தொழிலை ஆரம்பித்தவர் சாயிராணி. முகாமில் முதல் நாள் வருமானம் 5000 ருபா. இவருக்கு அந்தாளில் கிடைத்தது சுய தொழில் ஆரம்பிக்க முடியும் சொந்தக்காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கை.
இவர் தனது வரலாற்றை கூறுகையில்..
2009ம் ஆண்டுக்கு பிறகு நான் பல இழப்புகளை சந்தேன். இருந்தாலும் எனது நம்பிக்கையினால் சதுஸ்ரார் என்ற நிறுவனத்தை நிறுவினேன். அதுவே எனது வெற்றி.
2013ம் ஆண்டு புதுக்குடியிருப்பில் மீள் எழுச்சி ஆரம்பித்த போது காணி துப்பரவாக்க கூலி கொடுக்க விருப்பமில்லமால் ஒரு சிறிய இடத்தில் தரப்பால் வரிச்சிதடிகாளால் நிறுவி அதில் மரக்கறி வியாபாரம் செய்து ஆரம்பித்தது எனது இரண்டாம் கட்ட மீள் எழுச்சி.
பல இழப்புகளை சந்தித்த நான் பல இடங்களில் பணிப்பெண்ணாக வேலை பார்த்துள்ளேன். அவ்விடங்களில் எனக்கு பல மறக்க முடியாத பிரச்சினைகள் நிகழ்ந்துள்ளன. அதனால் இந்நாட்டிலே பெண்கள் பாதிக்கப்படக்கூடாது பெண்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ஆரம்பித்தது தான் இந்த சதுஸ்ரார் நிறுவனம்.
முள்ளிவாய்க்காலில் விட்டுச்செல்லப்பட்ட சைக்கிளைக்கொண்டு தனது முயற்சியால் தயாரித்த, முறுக்கு மிக்சர் பகோடா போன்ற உற்பத்திகளை விநியோகம் செய்து வந்தார். அந்தக்காலத்தில் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட 25000 ரூபா நிவாரணத்தை தனக்கு காசாக தரும் படி கேட்ட இவர் அதில் ஒரு முச்சக்கரவண்டியை குத்தகைக்கு எடுத்தார். அதன் மூலம் தனது வியாபாரத்தை விருத்தி செய்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எமது இடத்தை முன்னேற்றுவதோடு என்னைப் போன்ற பெண்களை முன்னுக்கு கொண்டுவந்து சர்வதேச மட்டத்தில் எமது பொருட்களை சந்தைப்படுத்துவதே எனது இலக்கு என்கிறார் இவர் மேலும்.
பொதுவாக முதயோருக்கான மூலிகை மாக்களை இவர் தற்போது உற்பத்தி செய்கிறார். இவை நோய்களை கட்டுப்படுத்துவது மாத்திரமன்றி நல்ல போசணையையும் வழங்கியது. குரக்கன் மா, குருஞ்சா பிட்டுமா, மரவெள்ளி பொரியல். கறிவேப்பிலை மா, வல்லாரை சத்து மா மரக்கறி பப்படம் என இவரது உற்பத்திகள் நீண்டு கொண்டே செல்கிறது.
முதல்முதலாக நான் வல்லரை டிப்பி டிப்பி செய்தேன். அதில் எனக்கு பொதிவசதிகள் கிடைக்காததால் அதை பப்படமாக மாற்றி இப்போது வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறேன். இதில் முற்றுமுழுக்க இலைதான். எந்த இரசாயனமும் இல்லை.
இந்த பப்படக்கண்டுபிடிப்பானது சர்வதேச ரீதியில் மிகவும் வரவேற்கப்படுவதோடு. தேசிய விருதையும் எனக்கு தந்தது. அப்போது எனக்கு வழங்கப்பட்ட சுற்றுலா பரிசை மறுத்து ஒரு காணி பெற்றுத்தரும் படி கேட்டேன். அதன் படி எனக்கு கால் ஏக்கா் காணி எனக்கு கிடைத்தது. அதில் நான் இரண்டு மாடி கட்டிடம் கட்டி தற்போது 2 கோடி பெறுமதியான சொத்தை உருவாக்கியுள்ளது இந்த பப்படம் என்று பெருமையாக கூறுகிறார் சாயிராணி.
இவர் விற்பனை உற்பத்தியை தவிர பல சமூக நலத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளார். இவரது முயற்சி வெற்றியடைய எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.



