அரசின் ஆட்கள் எனக்கூறி பிக்கப்பில் வந்தவர்களால் அச்சுறுத்தல் - யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் நகரில் "அரசின் ஆட்கள்' எனக் கூறி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் தம்மை அச்சுறுத்தியமையுடன் தாக்கவும் முயற்சித்தனர் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று மாலை 4.20 மணியளவில் தவிசாளர் உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியின் பழைய தபால் கந்தோர் ஒழுங்கை ஊடாக பயணித்தபோது, மத்திய மாகாண இலக்கத்தகடு கொண்ட செய்யப்பட்டுள்ள சொகுசு பிக்கப் (CP PP -0595) வாகனத்தில் ஒரு குழுவினர் எச்சரித்தவாறு தவிசாளரின் வாகனத்தை முந்திச் சென்றுள்ளனர்.
முந்திச் சென்றவர்கள் முன்னர் தனியார் நெடுந்தூர பஸ் தரிப்பிடமாகப் பாவிக்கப்பட்ட வளாகத்துக்குள் தவிசாளரின் வாகனம் நிறுத்தப்பட்டதுடன் அந்த வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தவிசாளார் என்ன பிரச்சினை எனக் கேட்டபோது,அவர்கள் தூ ண வார்த்தைகளை உபயோகித்தவாறு தவிசாளரை நோக்கி வந்தனர்.
தவிசாளார் தொலைபேசியில் அவசர பொலிஸ்(119) இலக்கத்துக்கு முயற்சித்தபோது, தாம் அரசின் ஆட்கள் எனக் கூறியவாறு தவிசாளரைத் தாக்குவதற்கு கட்டட உடைவு கல் ஒன்றை அக் குழுவில் வந்திருந்த ஒருவர் தூக்கி வீச எத்தனித்தபோது அவ்விடத்தில் ஒருவரால் தடுக்கப்பட்டுள்ளார். மக்கள் ஒன்றுகூடியவுடன் தவிசாளார் அச்சுறுத்தியவர்களைப் படம் பிடித்த போது தாமும் படம் பிடித்தவாறு தாக்க வந்தவர்கள் விலகிச் சென்றனர்.
இந்நிலையில், இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளார் தியாகராஜா நிரோஷ் அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாட்டைப் பதிவு செய்துளளார்.
முறைப்பாட்டில் தாக்க வந்தவர்கள் CP PP - 0595 என்ற இலக்க வாகனத்தில் வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றிவர சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடமொன்றில் இந்த அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.