களுத்துறையில் சோகம் - தண்டவாளத்தை கடக்க முற்பட்ட இரு பெண்கள் ரயில் மோதி பலி
களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரத்திற்குச் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள நடைமேடையை அடைய ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மரதானையிலிருந்து காலி நோக்கிச் சென்ற ரயில் அவர்கள் மீது மோதியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் பாதுகாப்பற்ற முறையில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோதே ரயில் அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த இரு பெண்களின் உடல்களும் களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன; மேலதிக நடவடிக்கைகளுக்காக அவை களுத்துறை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.
இச்சம்பவம் குறித்து களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.