புகையிரதத் திணைக்களத்தில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களை தீர்க்க வலியுறுத்தல்! இல்லையேல் போராட்டத்தில் குதிக்க தீர்மானம்
புகையிரதத் திணைக்களத்தில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, புதிய புகையிரதப் பொது முகாமையாளரை (General Manager of Railways) நியமிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA) வலியுறுத்தியுள்ளது.
இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், செப்டம்பர் 17 அன்று பல்வேறு புகையிரதத் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நிச்சயமாக நடைபெறும் என்று அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
புகையிரதத் தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு இதுவரை முறையான தீர்வுகள் வழங்கப்படாததால், வரலாற்றிலேயே முதன்முறையாக புகையிரதப் பயணிகள் சங்கங்களும் இத்தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், புகையிரதத் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்துப் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு புகையிரதத் தொழிற்சங்கங்களுக்கு நாளை (14) வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளைய கலந்துரையாடலில் முறையான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று புகையிரதத் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே