நீர்கொழும்பில் “Voice to Policy Dialogue” – இளைஞர்களின் குரலை கொள்கை உருவாக்கத்துடன் இணைக்கும் முயற்சி!
நீர்கொழும்பில் நடைபெற்ற “Voice to Policy Dialogue” நிகழ்வில் கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினர்.
திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழு மற்றும் Coalition for Inclusive Impact (CII) ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைப்பதுடன், அவற்றுக்கான கொள்கை ரீதியான தீர்வுகளையும் பரிந்துரைக்கும் தளமாக அமைந்தது.
கல்வி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி, தொழில்முனைவு, தொழில்நுட்பம் மற்றும் அரசியல் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இளைஞர்கள் தங்களது அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தீர்வு யோசனைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.
இளைஞர்கள் முன்வைத்த பரிந்துரைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது மற்றும் சம்பந்தப்பட்ட பாராளுமன்றக் குழுக்களுடன் இளைஞர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இளைஞர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முறையாக ஆவணப்படுத்தி, மேலதிக பரிசீலனைக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கும் நோக்கில் Youth Rapporteur ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்களின் கருத்துகளை ஒருமுறை கேட்டறிவதுடன் நிறுத்தாமல், கொள்கை உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியமும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை நேரடியாக கொள்கை உருவாக்கத்துடன் இணைக்கும் வகையில் மேலும் பல “Voice to Policy Dialogue” கலந்துரையாடல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இளைஞர்களின் குரல், நாட்டின் கொள்கை உருவாக்கத்திலும் பிரதிபலிக்க வேண்டும்” என்பதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே