கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம்: இனவாதச் சாயம் பூச வேண்டாம் – சட்டத்தரணி அ. நிதான்சன்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள ஆடை தொடர்பான விவகாரத்தை இன அல்லது மதப் பிரச்சினையாக மாற்றாமல், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் அரசின் சுற்றுநிருபங்களுக்கு அமைவாக நியாயமான தீர்வொன்றை எட்ட இரு சமூகங்களும் முன்வர வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதித் தலைவர், சட்டத்தரணி அ. நிதான்சன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்புகள் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த அவர், வைத்தியசாலை நிர்வாகம் சட்ட ஏற்பாடுகளுக்கும் அரசின் சுற்றுநிருபங்களுக்கும் அமைவாக உரிய தீர்வை வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், ஆடை விவகாரத்துடன் குங்குமம் அணிவது தொடர்பிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான நடவடிக்கைகள் மத அல்லது இன பாகுபாட்டின் அடிப்படையிலானவை எனக் கருதாமல், வைத்தியசாலை நடைமுறைகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அணுக வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
“இந்த விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றாமல், அனைவரினதும் மத உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் வகையில் சட்டத்திற்கும் அரசின் சுற்றுநிருபங்களுக்கும் அமைவாக தீர்வு காண வேண்டும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் வகையில் இவ்விடயம் கையாளப்பட வேண்டும்” என சட்டத்தரணி அ. நிதான்சன் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே