"ரங்கன ஹேரத் இடத்தை யாரும் நிரப்பவில்லை!" - அஸ்வின்.
ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சுப் பலம் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதே அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் எவரும் இலங்கை அணியில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சமூகத் தளத்தில் இது குறித்துப் பேசியுள்ள அஸ்வின், ரங்கன ஹேரத் இன்னும் சுழற்பந்து வீச்சை தலைமை தாங்கி நடத்தியிருந்தால், இந்தியாவிற்கு எதிராக இலங்கைக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.
இலங்கை அணியில் யார் சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
ரங்கன ஹேரத் இன்னும் விளையாடிக்கொண்டிருந்தால், இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக நான் சொல்லியிருப்பேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளராக பிரபாத் ஜெயசூரியவை சுட்டிக்காட்டிய அஸ்வின், காற்றினூடாக அவர் சற்று மெதுவாகப் பந்தை வீசுவது இந்திய துடுப்பாட்ட வரிசைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பதில் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அவர்களிடம் பிரபாத் ஜெயசூரிய என்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளர் உள்ளார் ,அவர் சற்று மெதுவாகப் பந்துவீசுகிறார்.
இந்த இந்திய துடுப்பாட்ட வரிசைக்கு எதிராக நீங்கள் மெதுவாகப் பந்துவீசினால் அது எளிதாக இருக்காது.
ஏனெனில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பலர் 'பேக் ஃபூட்' (Back foot) நகர்வில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் நிஷான் பீரிஸ் ஆகியோரை சுட்டிக்காட்டிய அஸ்வின், இலங்கை 'ஏ' தொடரின் போது தன்னை ஈர்த்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் குறித்துக் குறிப்பிட்ட போதிலும், அவரது பெயரை நினைவுகூர முடியவில்லை என்றும் கூறினார்.
காலி மைதானத்தில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி எவ்வளவு சவாலாக விளங்கும் என்பதை அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களின் கலவையே தீர்மானிக்கும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே