மட்டக்களப்பில் பிள்ளையானால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் - நீண்டகாலமாக தொடரும் காணிப்பிரச்சினை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைசார் மற்றும் நீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில், நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாவட்டத்தின் காணி நிர்வாகம், காணி உரிமைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக, மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைகள், காணி ஆவணப்படுத்தல், காணி அனுமதிகள், அரச காணி நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நடைமுறைசார் தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எடுத்துக்கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் அனைத்தும் ஒரே தன்மையுடையவை அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட சாணக்கியன், மக்களின் உண்மையான பிரச்சினைகளும், அவர்களின் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்க வேண்டுமெனில், ஜனநாயக பிரதிநிதிகளின் கருத்துக்களும் அவசியம் பதிவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
மேலும், தனியார் காணிகள் தொடர்பான விவாதத்தின் போது, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் உள்ள புளுட்டுமான் ஓடை பகுதியில் பல ஏக்கர் தனியார் காணிகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்படுகிறது.
இவ்வளவு காலமாக இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதமை கவலையளிக்கிறது.
அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்த காணி ஆணையாளர் நாயகம், காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே