பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை காரியாலயத்தில் திடீர் தீ விபத்து!
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (17-07-2026) நள்ளிரவு 1.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
அலுவலகப் பகுதிக்குள் இருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை அவதானித்த அங்கிருந்த காவலாளி, உடனடியாக அது குறித்து சங்கப் பணியாளர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து விரைந்து செயல்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து தீவிர போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், இந்த தீ விபத்தின் காரணமாக அலுவலகத்தில் இருந்த வளிச்சீராக்கி , நிழற்படப் பிரதி எடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே