நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைக்கு முகம்கொடுப்பதாக குற்றச்சாட்டு!
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் Y.O. சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்ட 150க்கும் மேற்பட்ட கைதிகள் மீது திட்டமிட்ட முறையில் கொடூரமான சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு குற்றம் சாட்டியுள்ளது,
பாதிக்கப்பட்ட கைதிகளை நேரில் சந்தித்து சட்ட உதவிகளை வழங்கச் சென்ற சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டதாகவும், அவர்களின் உரிமை அப்பட்டமாக மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது,
இது தொடர்பாகக் கைதிகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளால் ஆத்திரமடைந்த சிறைக்காவலர்கள், கைதிகள் மீது பழிவாங்கும் நோக்கில் காலை, மதியம், இரவு என ஒரு நாளைக்கு மூன்று முறை திட்டமிட்ட முறையில் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த வன்முறையால் பெருமளவிலான கைதிகள் பலத்த காயமடைந்து, நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மறுபுறம், இந்தத் துஷ்பிரயோகங்களை மூடிமறைப்பதற்காகச் சிறைச்சாலை திணைக்களம் கடுமையான தகவல் இருட்டடிப்பை மேற்கொண்டு வருகிறது. தங்களது உறவினர்களின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து அறியாது தவிக்கும் குடும்பத்தினருக்கு அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியும் முற்றாக மறுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக நீதிவான் நீதிமன்றமும் நீதித்துறையும் உடனடியாகத் தலையிட்டு, வெலிக்கடை சிறைக்கூடத்தை அதிரடி சோதனைக்கு உட்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே