மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பேரழிவு நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை - பிரதமர்
மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பேரழிவு நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளைப் புனரமைப்பதற்கும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட அனைத்து நிதியுதவிகளும் பிரதி திறைசேரி செயலாளரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் ஒரு சிறப்பு கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு இந்த நிதிகள் வெளிப்படையாகவும் திறமையாகவும் பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், வாழ்வாதாரங்களை மீட்டெடுத்தல், மற்றும் சேதமடைந்த பொது உள்கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை புனரமைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிதிகள் அனைத்தின் மேலாண்மை மற்றும் பயன்பாடு மிகுந்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சி கோட்பாடுகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே