மட்டக்களப்பு புதுப் பாலம் மக்களின் பாவனைக்காக திறப்பு: கனரக வாகனங்களுக்குத் தடை!
கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி திடீரென உடைந்து விழுந்த பிரதான பாலத்திற்குப் பதிலாக, பொதுமக்களின் அவசரத் தேவை கருதி இந்தத் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) நேரடி மேற்பார்வையில், சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவில் மிகக் குறுகிய காலத்திற்குள் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 10) காலை 9.00 மணி முதல் பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகள் பாலத்தின் பாதுகாப்பு மற்றும் தற்காலிகத் தன்மையைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்:
பேருந்துகள், லொறிகள் உள்ளிட்ட எந்தவொரு கனரக வாகனமும் இந்தத் தற்காலிகப் பாலத்தைப் பயன்படுத்த முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரப் பாலம் ஒன்று அமைக்கப்படும் வரை கனரக வாகனங்கள் மாற்றுப் பாதைகளையே பயன்படுத்த வேண்டும். பாலத்திற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விசேட வீதிப் போக்குவரத்துப் பலகைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, ஓட்டுநர்கள் மிகவும் அவதானமாக, குறைந்த வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி இந்த அவசரப் பணியைப் பாராட்டியுள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கையையும் போக்குவரத்தையும் மிக விரைவாக மீட்டெடுப்பதற்காக, இரவும் பகலும் அர்ப்பணிப்புடன் உழைத்த பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச மக்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே