இரு பிள்ளைகளின் மரணத்தில் திருப்பம்: மட்டக்களப்பில் தந்தை கைது, திடுக்கிடும் பின்னணி!
கடந்த மே 27 (புதன்கிழமை) மாலை சுமார் 4.00 மணியளவில் விடுதியின் அறை இலக்கம் 107-ல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று பிற்பகல் 2.00 மணியளவில், கைதான தந்தை தனது 5 வயது மகள் (சந்தனி நிமாஷா) மற்றும் 3 வயது மகன் (கசுன் மதுசங்க) ஆகிய இருவரையும் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, மதுபானம் அருந்துவதற்காக வெளியே சென்றுள்ளார்.
தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில் விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அறை பூட்டப்பட்டிருந்ததால் குழந்தைகளால் வெளியேற முடியாமல் போயுள்ளது.
தீயினால் ஏற்பட்ட அடர்ந்த நச்சுப் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் (Suffocation) காரணமாகவே இரு பிள்ளைகளும் மயக்கமடைந்து, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சந்தேகநபர் கடந்த மே 23 ஆம் திகதி முதல் பதுளையிலிருந்து வந்து இந்த விடுதியில் தங்கியுள்ளார். மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தனது மனைவிக்கு புற்றுநோய் எனக்கூறி, இந்த இரு பிள்ளைகளையும் காட்டியே அவர் பொதுமக்களிடம் பெருமளவில் பண யாசகம் பெற்று வந்துள்ளார்.
கைதான நபர் மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் இவருக்கு எதிராக பல மோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
(வீடியோ இங்கே )