இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க IMF ஒப்புதல்!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது மறுஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கமைய இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள IMF பிரதி நிர்வாக இயக்குநர் கென்ஜி ஒகமுரா, சவாலான சூழ்நிலை நிலவினாலும், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) விதிகளை இலங்கை வலுவாகச் செயல்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், தித்வா புயல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2026-ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மேலும், அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் குறைந்து வரும் சுற்றுலா வருவாய் ஆகியவையே இதற்குக் காரணங்கள் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.