புலிகளுக்கு இந்தியா உதவி செய்ததா? ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட தகவல்!
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இலங்கை ஆட்சியாளர் மீதான சந்தேகமே, அக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு மற்றும் பயிற்சி வழங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எழுதிய 'எக்கட கெடும' (ஒன்றுகூடிய மோதல்) எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான உறவு பெரும் விரிசலுக்கு உள்ளாகியிருந்தது. அதற்குப் பிரதான காரணம், அவர் அமெரிக்காவுடன் மிக நெருக்கம் காட்டியமையாகும்.
ஒரு சிறிய நாடு தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளும்போது எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு, திருகோணமலை விவகாரம் ஒரு கசப்பான வரலாற்றுப் பாடமாகும்.
இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை மையமாகக் கொண்டே அப்போதைய இந்தியத் தலைமை தீர்மானங்களை எடுத்தது. திருகோணமலை எண்ணெய் தாங்கிகளைப் பராமரிப்பது தொடர்பான விவகாரம் மற்றும் 'வோய்ஸ் ஆஃப் அமெரிக்கா' வானொலி நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்கும் முயற்சி போன்றவை, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமென அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கருதினார்.
இந்தச் சந்தேகமே, இந்திய அரசாங்கம் அக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு மற்றும் பயிற்சி வழங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
2012 முதல் 2014 வரையான காலப்பகுதியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அழுத்தங்கள் மிகத் தீவிரமானவை. சர்வதேச சமூகம் மற்றும் புலம்பெயர் அமைப்புகள், விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுக்க முயற்சித்தார்கள்.
அந்த இக்கட்டான காலகட்டத்தில், சீன வெளிவிவகார அமைச்சர்களான யாங் ஜியேச்சி மற்றும் வாங் யீ, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் வழங்கிய தூதரக ரீதியான ஒத்துழைப்பு மற்றும் வீட்டு அதிகார வாக்குறுதி போன்றவை எமது இறையாண்மையைப் பாதுகாத்தன. எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம் என்றார்.
(வீடியோ இங்கே )