சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய கட்டுப்பாடு: பிளாஸ்டிக் போத்தல்களுக்குத் தடை!
சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் (Single-use) பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் (CEA) மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், சுற்றாடல் அமைச்சினால் இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் போத்தல்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இவை நாட்டின் முக்கிய நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் கடற்கரைகளை வந்தடைந்து, மிக மோசமான சுற்றாடல் மாசடைவை ஏற்படுத்துகின்றன.
காடுகள் மற்றும் தேசிய பூங்காக்களுக்குள் வீசப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை உட்கொள்வதால் யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
பிளாஸ்டிக் போத்தல்கள் சிதைவடைவதன் மூலம் குடிநீரிலும், கடல் உணவுகளிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்து, மனித ஆரோக்கியத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இந்தத் தடையை மீறி ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் அல்லது விநியோகிப்பவர்களுக்கு எதிராக சுற்றாடல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் போத்தல்களுக்குப் பதிலாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய (Reusable) கண்ணாடி போத்தல்கள், உலோகப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
(வீடியோ இங்கே )